அபிராமி அந்தாதி தோன்றிய தை அமாவாசைத் திருநாள்:

'தாரமர் கொன்றையும்' என்று துவங்கும் விநாயக வணக்கத் திருப்பாடலில் துவங்கி, வார்த்தைகளால் விளக்கவொண்ணா இனிமை பொருந்திய 100 அற்புதத் திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றிருப்பது அபிராமி பட்டர் அருளியுள்ள 'அபிராமி அந்தாதி'. 

அபிராமி பட்டர் அருள் பெற்றுள்ள நிகழ்வினை அறிந்து கொள்வது முதற்படி எனினும் அப்பெருமகனார் அருளியுள்ள திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து பயன்பெறுவதே நம் இறுதி நோக்கமாக இருத்தல் வேண்டும். அனுதினமும் 5 திருப்பாடல்கள் வீதம் பாராயணம் புரிந்து வந்தாலே, 20 நாட்களில் அனைத்து திருப்பாடல்களுடனும் முதல்கட்ட பரிச்சியம் ஏற்பட்டு விடும். இவ்விதமாய் இயல்பாகவே பாடல்கள் மனனமாகும் வரையில், இதே முறையில் பாராயணத்தைத் தொடர்ந்து வருதல் சிறப்பு. 

இத்திருப்பாடல்கள் யாவும் அருள்நிலையில் அபிராமி பட்டரின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டவை, அதீத மந்திர சக்தி பொருந்தியவை. ஆதலின் இன்ன பாடலுக்கு இன்ன பலன் எனும் சிந்தனையை விடுத்து, வாரம் அல்லது மாதம் ஒருமுறையேனும் இத்தொகுப்பின் 100 திருப்பாடல்களையும் முழுமையாய்ப் பாராயணம் புரிவோம், அமிர்தகடேஸ்வரப் பரம்பொருளின் இடபாகத்துறையும் அன்னை அபிராமியின் பரிபூரணத் திருவருளுக்கு உரியராகி, நற்பலன்கள் யாவையுமே பெற்று வாழ்வோம். 

(திருப்பாடல் 41):
புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும்கூடி; நம்காரணத்தால்
நண்ணிஇங்கேவந்து, தம்அடியார்கள் நடுஇருக்கப்
பண்ணி, நம் சென்னியின்மேல் பத்ம பாதம் பதித்திடவே!!!

(திருப்பாடல் 50):
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி!என்  
றாய கியாதி உடையாள் சரணம்-அரண்நமக்கே.

(திருப்பாடல் 69):
தனம் தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்; தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே;
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!!!'

(திருப்பாடல் 77):
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே!!!

சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு (சிவ புராணம் அறிவிக்கும் முக்கிய நிகழ்வுகள்):

Daksheshwar Mahadev temple in Kankhal
பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து ஆதிப் பரம்பொருளான சிவபெருமானிடம் 'பிரஜாபதி' பட்டத்தினையும், ஈரேழு புவனங்களின் தலைமைப் பதவியையும், உலகீன்ற உமையன்னையைப் புதல்வியாக அடையும் பெரும் பேற்றினையும் வரமாகப் பெறுகின்றான். அன்னையும் 'தாட்சாயணி' எனும் திருநாமத்தில் தட்சனின் அரண்மனையில் இனிது வளர்ந்து வருகின்றாள்.
Daksheshwar Mahadev temple in Kankhal
எண்ணற்ற ஆண்டுகள் சர்வ வல்லமையோடு ஆட்சி புரிந்து வந்த மமதையால் வரம் தந்த இறைவனை மெதுமெதுவே மறக்கின்றான் தட்சன், தன்னையே 'ஈஸ்வரன்' என்றும் எண்ணத் துவங்கி விடுகின்றான். இந்நிலையில் திருக்கயிலை நாதருக்கும் அன்னைக்கும் திருமண வைபவம் நிச்சயிக்கப் பெறுகின்றது, தட்சனோ 'கன்னிகா தானம் புரிகையில் என்னுடைய கரங்கள் உயர்ந்திருக்கப் பரமேஸ்வரரின் கரங்கள் தாழ்ந்திருக்குமே' என்று மமதையோடு எண்ணுகின்றான். ஆணவ மலத்துடன் அண்டர் நாயகனை அணுகவும் ஒண்ணுமோ? மணநாளுக்கு முன்னரே (தட்சன் அறியாத நிலையில்) மகாதேவர் அன்னை சதி தேவியைத் திருக்கயிலைக்கு அழைப்பித்துக் கொள்கின்றார்.
Daksheshwar Mahadev temple in Kankhal
Daksheshwar Mahadev temple in Kankhal
இதன் தொடர்ச்சியாக நடந்தேறிய நிகழ்வுகளால், வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு, ஹரித்வாரின் கங்கைக் கரையிலுள்ள 'கனகல்' எனும் தலத்தில் பெரும் யாகமொன்றினையும் துவங்குகின்றான். அம்பிகையோ தட்சனுக்கு அவனுடைய தவறினை உணர்த்தித் திருத்தும் பொருட்டு யாக சாலையில் தோன்றுகின்றாள்.
Daksheshwar Mahadev temple in Kankhal
தட்சனோ ஜகத் ஜனனியான உமையன்னையை அவமதித்ததோடு, சிவபெருமானையும் கடுமையாக நிந்தித்துப் பேசுகின்றான். சிவ நிந்தனையைக் கேட்கப் பொறாத அன்னை, சிவ அபராதியான தட்சனின் புதல்வியாக எடுத்திருந்த தன்னுடைய தேகத்தினை முற்றிலும் அழித்தொழிக்கும் பொருட்டு, யோகத் தீயினால் யாக குண்டமொன்றை அவ்விடத்திலேயே தோற்றுவித்து, அதனுள் தன் திருமேனியினை மாய்த்துக் கொள்கின்றாள்.
Daksheshwar Mahadev temple in Kankhal
சிவபெருமானின் கடும் கோபத்திலிருந்து வெளிப்படும் அன்னை காளி மற்றும் வீரபத்திரர் இருவரும் தட்சனின் யாக சாலையில் தோன்றி, அங்குள்ளோர் அனைவரையும் வதைத்து, யாக சாலையை சர்வ நாசத்துக்கு உள்ளாக்கிய நிகழ்வினைச் சிவபுராணம் விரிவாகப் பேசுகின்றது. இத்தலத்தில் அன்னை சதி தேவி தன் திருமேனியினை மாய்த்துக் கொண்ட யாக குண்டத்தினை இன்றும் தரிசிக்கலாம்.
Sati devi in fire
ஆலமுண்ட இறைவர் கடும் சீற்றத்துடன் அன்னை சதி தேவியின் எரியுண்ட திருமேனியைச் சுமந்த வண்ணம் ஊழிக் கூத்தினை ஆடத் துவங்க, அண்டங்கள் அனைத்தும் சிதறுண்டு மகாப் பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றுகின்றது. பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகா விஷ்ணு வேத முதல்வரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் அன்னையின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்ய, அக்கண முதல் அவை 51 சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன.
veerabhadra destroys daksha yagna
பின்னர் சிவபெருமானின் திருவருளால் ஆட்டுத் தலையினைப் பெற்று உயிர்த்தெழும் தட்சன் மறை மூர்த்தியின் திருவடி தொழுகின்றான். இறைவனின் இருப்பை உணரவும், தர்மங்களை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே. ஆன்மாக்கள் முதலில் இறைவனை மறுப்பதும், அறியாமையால் எதிர்ப்பதும், பின்னர் ஞானம் பெற்றுப் பணிவதும் காலகாலமாக நடந்து வரும் போராட்டம். ஆட்டின் தலை அஞ்ஞானத்தைக் குறிப்பது. ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது இந்நிகழ்வின் உட்குறிப்பு.

Daksha and Lord Shiva

ஆதி காமாக்ஷி பீடம் (காஞ்சிபுரம்):

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கும், காமக் கோட்டம் என்று குறிக்கப் பெறும் மிகப் பிரசித்தி பெற்ற காமாக்ஷி அன்னை திருக்கோயிலுக்கும் இடையில் (குமரக் கோட்டத்திற்கு அருகில்) அமைந்துள்ளது மிகப் புராதனமான 'ஆதி காமாட்சி திருக்கோயில்'. காஞ்சி காமக்கோட்டத்தில் காமாட்சியாய் உமையன்னை கோயில் கொள்வதற்கு மிகமிக முன்னரே ஆதி காமாட்சியாய் இங்கு எழுந்தருளி இருக்கின்றாள். அன்னை சதி தேவியின் இடுப்பு (திருஇடை) எலும்பு விழுந்த இடம் இதுவே என்று மேருதந்திரம் எனும் ஆகம நூல் நமக்கு அறிவிக்கின்றது (ஆதார நூல்: 51 அட்சர சக்தி பீடங்கள், ஆசிரியர்: சேவா ரத்னா திரு. ஜபல்பூர் நாகராஜ் சர்மா அவர்கள், விகடன் பிரசுரம்).

ஆதி சக்தி பீடேஸ்வரியான அன்னை இங்கு காளிகாம்பிகையாய் எழுந்தருளி இருக்கின்றாள், நான்கு திருக்கரங்களோடு அதி கம்பீரத் திருத்தோற்றத்தில் கோயில் கொண்டுள்ள இவள் பின்னிரு கரங்களில் பாச அங்குசங்களோடும், முன்னிரு கரங்களில் அபய ஹஸ்தம் மற்றும் அட்சய பாத்திரத்தோடும் திருக்காட்சி அளிக்கின்றாள். தரிசிக்கும் அடியவர்களின் உடல் உள்ளம் ஆன்மா இவையாவையும் உருக வைத்துச் சிவானந்தப் பேற்றினை அளித்து அருளும் அதி ஆச்சரியத் திருக்கோலம்.   
இவளின் தரிசினப் பேறு கிடைப்பது மிகவும் அரிது என்றும் இந்த அன்னையே திருவுள்ளம் கனிந்து அழைத்தால் மட்டுமே இத்தலத்தில் இவளைத் தரிசித்துப் பணியும் பரம பாக்கியம் கிட்டும் என்றும் இவ்வாலய அர்ச்சகர் விவரிக்கின்றார்.